தனி ஈழமே நிரந்தரத் தீர்வு; 68% மக்கள் ஆதரவு - கருத்துக் கணிப்பு
07.02.2009
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியின் 'மக்கள் ஆய்வகம்' நடத்திய ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.இந்த ஆய்வில் மக்கள் முன் ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர்.
தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு : இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 சதவிதம் பேரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 சதவிதம் பேரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2.0 சதவிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய - மாநில அரசுகள் மீது கோபம் : இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85.0 சதவிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மத்திய - மாநில அரசுகள் மீது 44.5 சதவிதம் பேரும், 25.5 சதவிதம் பேர் ராஜபக்சே அரசின் மீதும், பன்னாட்டுச் சமூகங்கள் மீது 12.0 சதவிகித பேரும், விடுதலைப் புலிகள் மீது 3.0 சதவிகித பேர் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உடனடி தீர்வு போர் நிறுத்தம் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முகப்பு