இலங்கை: சீர்காழி காங்கிரஸ் பிரமுகர் தீக்குளிப்பு
07.02.2009
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியை கண்டித்தும் சீர்காழி காங்கிரஸ் இணை செயலாளர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பிடாரி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). சீர்காழி 17-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளராக உள்ளார்.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் ரவிச்சந்திரன், தனது வீட்டின் அருகே உள்ள தெருவுக்கு விரந்தார். 'இலங்கையில் போரை நிறுத்துங்கள்! தமிழ் வாழ்க!!' என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரவிச்சந்திரனின் உடலில் 65 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாக்குமூலம்: இதனிடையே உயிருக்கு போராடிய நிலையில் மயிலாடுதுறை நீதிபதியிடம் அவர் அளித்ததாகக் கூறப்படுகிறது.
அதில், ஈழத் தமிழர்களின் அவலங்களை டி.வி.யில் பார்த்து நெஞ்சு பதைத்ததாகவும், ஈழத் தமிழர்களுக்கு உதவ தனது காங்கிரஸ் கட்சி முன்வரவில்லையே என ஆதங்கப்பட்டதால் இம்முடிவுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஈழத் தமிழர்களுக்காக உயிரை காணிக்கையாக்குவதாக, அவர் வாக்குமூலத்தில் கூறினார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இணை செயலர் ஒருவர் தீக்குளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பு